முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை மிக விரைவில் வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நிலையில், இதுவரை சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கின்றது என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையி ன் 125வது அமர்வு இன்று நடைபெற்ற வேளையில் இதனைத் தெரிவித்துள்ள அவர், நந்திக்கடல் மற்றும் அத சிறீனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4141.67 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் நாயாறு மற்றும் அதனை ச்சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டயர்கள் இதற்குள் அடங்குகின்றன எனவும், இந்த பகுதி களில் கிட்டத்தட்ட 9000 குடும்பங்களுக்கு மேல் தமது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் தீர்க்கக்கூடிய வகையில் இந்த நிலைகளை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய காலந்தொட்டு ஒரு செழிப்பான இடமாகவும், மக்கள் இறால், மீன்கள் என்று வீச்சுவலைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விடுவலைகள் மூலமாகவும் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை காக்கும் இடமாகக் காணப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தவிர இதனைச் சூழவுள்ள வயல் நிலங்கள் கூட இதனுள் அடங்குவதாகவும், முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் மட்டுமல்லாமல் வற்றாப்பளை அருகாக அமைந்துள்ள வயல் நிலங்களும் இதற்குள் அடங்குவதனை அறிய முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாயாற்றுப்பகுதியிலும் வயல் நிலங்கள் சிறு பயிர் செய்கைக்கான இடங்களையும் உள்ளடக்கி இலங்கை மத்திய அரசு தமது கட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள் எனவும், முல்லைத்தீவு சகல வளங்களுமுள்ள ஒரு இடமாக உள்ள நிலையில், இங்கு பல வடிவங்களில் அரசாங்கம் நில அபகரிப்புக்களை செய்து வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மணலாறு குடியேற்றம், மகாவலி எல் வலய போர்வையில் திட் டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவம் ஆக்கிரமிப்புக்கள், பௌத்த பிக்குகளின் மதத் திணிப்புக்கள், தொல்பொருள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள், வனவள துறையின் காணி பறிப்புக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள் என்று, தனது கணிப்பின்படி முல்லைத்தீவில் மட்டும் சுமார் 80ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் நிலங்கள், நீர்நிலைகள் என்று அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுமக்கள் வாழும் இடமென்ற நிலைமாறி, திட்டமிட்டு தமிழ் மக்களை வெளியேற்றுமிடமாக மாறி வருகின்றது எனவும் தெரிவித்துள்ள ரவிகரன், இப்படியான திணிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளார்.





