போரின் காரணமாக இந்தியாவில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் 3000 த்திற்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு முதல் நாடு திரும்பிய அகதிகளை குறிக்கும் இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு 1,520 அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபொல இந்த ஆண்டிலும் கடந்த மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் 557 அகதிகள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இன வன்முறைகளை தொடர்ந்து 3.04 இலட்சம் அகதிகள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர் எனவும், கடந்த மே மாதம் முதலாம் நாள் வரையிலான கணக்குப்படி, தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 107 முகாம்களில், 61,422 அகதிகள் வசித்து வருகின்றனர் எனவும், 35,316 அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கியுள்ளனர் என்றும் தமிழக முதலமைச்சரின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.