இறுதி போரின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில், அவர்களது உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக, காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும், அதற்கென முறையான திட்டமொன்று அவசியமெனவும் அவர் கூறியுள்ளார்.
இறுதி போரின்போது பலரும் பாதுகாப்புத் தரப்பிடம் சரணடைந்த நிலையில், வன்னி கட்டளைத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயமசூரிய மற்றும் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரிடம் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென, உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.