தமிழகத்தின் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஈரோட்டை அடுத்த கொடுமணல் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிரம்மி எழுத்துகள் அமெரிக்காவில் உள்ள பழம்பெரும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியிட்டுளளார்.
இந்த ஆய்வின் போது அவை கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 350-லிருந்து 375 ஆண்டுக்கு காலத்து எழுத்துகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழை எல்லா மொழிகளைவிட தொன்மையான மொழி என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும், தமிழரின் நாகரீகம் பழமையான நாகரீகமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழமையான நாகரீகம் என்று கீழடியை கூறுகின்றனர் என்றும், அவ்வாறு கீழடி நாகரீகம் என்பது பழமையானது என்று கூறும்போது அதனை மறைக்க முற்படுகின்றனர் எனவும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
பண்டைய காலத்தில் போர் தொடுத்து வந்து நம்முடைய வரலாற்று சின்னங்களை அழித் தார்கள் என்றும், இப்போது நம்முடைய அறியாமையால் அழித்து வருகிறோம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நம்முடைய தொன்மை மற்றும் வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.