தமது போராட்டம் முடியவில்லை எனவும், தமது உறவுகளுக்கு முடிவு கிடைத்த பின்னரே தமது போராட்டம் முடியும் எனவும்? போராட்ட வடிவமே மாற்றப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த ஆண்டு பங்குனி மாதம் 8 ம் நாள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 18 ம் நாள் 500 ஆவது நாளில் அந்த இடத்தில் முடிவுறுத்தப்பட்டது.
ஆனால் அது தமது போராட்டத்தின் முடிவல்ல எனவும், அந்த இடத்தில் தமக்கு பாரிய சிக்கல்கள் இருந்ததனால், அந்த இடத்தில் தமது போராட்டத்தை நிறுத்தி, மாற்றுவழியில் போராட முடிவெடுத்ததாகவும், அதன்விளைவாக தமக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதில் இருந்து போராடுகிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது உறவுகள் கிடைத்தாலே அன்றி தமது போராட்டம் நிறுத்தப்படாது எனவும், காலத்துக்கு காலம் வடிவங்களை மாற்றி போராடிக்கொண்டே இருக்கும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை பத்துமணியளவில் மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் தமக்கான அலுவலகத்தை திறந்து போராட்டத்தை தொடரும் நிலையிலேயே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளனர்.