நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாது என்று, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர்கொண்ட அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் இந்த புதிய அரசமைப்பை வைத்துக்கொண்டு இவர்கள் இருவரும், பிரதமர் ரணிலி விக்கிரமசிங்கவிடம் இருந்தும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களிடம் இருந்தும் பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு – புஞ்சி பொரளையிலுள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அரசமைப்பு வழிநடத்தல் குழு உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழுவின் இணக்கமின்றி, புதிய அரசமைப்பைத் தயாரிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுமந்திரனிடம் கேட்பதற்காக சில கேள்விகள் உள்ளதாகவும், அந்தக்கேள்விகளைத் தான் அடுத்த ஊடகச் சந்திப்பின்போது முன்வைப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.