வட மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பினை ஜயம்பதி விக்கிரமரத்ன, சுமந்திரன் மாத்திரம் நிறைவேற்ற போவதில்லை எனவும், புதிய அரசியலமைப்பொன்று வருமானால் அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அதன்பின்னர் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும் எனவும், அதன்போது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய அரசியலமைப்பில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதனை கண்டுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜயம்பதி விக்கிரமரத்னவும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும் எனவும், பிரதமரினதும் வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும், அதில் தவறுகள் ஏதும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பினை தயாரித்தமைக்காக அவர்களின் ஒப்புதலை மாத்திரம் அரசாங்கம் பெறாது எனவும், ஆகவே யாரும் குழப்பம் கொள்ள தேவையில்லை என்றும், எதிரணியினர் இவ்வாறான கருத்துகளை கூறி மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பார்க்கின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.
அத்துடன் வட மாகாணத்திற்கு முதலில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கோருகின்றன எனவும், எனினும் வடக்கிற்கு மாத்திரம் தனியாக தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது எனவும், இந் நிலையில் வட மாகாணத்தற்கு மாத்திரம் தனியாக தேர்தல் நடத்த முடியாது என்றும், எனினும் வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.