இலங்கைக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படைக்கு சீனா போர்க்கப்பல் ஒன்றைக் கொடையாக வழங்கவுள்ளது என்று அண்மையில் கொழும்பில் நடந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழாவில், சீன பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சீன ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங், மேலும் ஒன்று அல்லது இரண்டு போர்க்கப்பல்களை இலங்கைக்கு சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு போர்க்கப்பல் தெற்காசியாவில், தற்போதுள்ள பிராந்திய இராணுவச் சமநிலையை பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தாது எனவும், இது பிரதானமாக கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட – 378 அடி நீளம் கொண்ட – உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்த்ககது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுவதுடன், ஹவாயில் தரித்திருக்கும் ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’ போர்க்கப்பலின் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் நாள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.