தமிழகத்தின் சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் மன்ஷுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழி சாலையை அமைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு இருப்பதும், இந்த திட்டத்திற்காக தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவது உண்மை என்பதும் மத்திய அரசுக்குத் தெரியுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கேள்வி நேற்றைய நாள் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் மன்ஷுக் மாண்டவியா வழங்கியுள்ள பதிலிலில், எட்டுவழி சாலையை அமைக்கும் அரசின் திட்டத்திற்காக தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கள பணியகம் மூலம் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதேவேளை எட்டு வழி சாலை திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக மறுபரிசீலனை ஏதும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும், ஆனால், இந்த சாலையால் 68 கிலோமீட்டர் தூரம் குறைவதுடன் பல்வேறு பயன்கள் உள்ளன என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த சாலை அமைக்கப்பட்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.