1989ஆம் ஆண்டு இதேநாளில் இருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப் படுகொலையின் 29ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.
அமைதி நிலை நாட்டுகிறோம் என்று ஈழத்தில் கால்பதித்த பிராந்திய நலன் கொண்ட இந்திய அமைதிப்படை, ஈழ தேசத்தில் தன் முகமூடியை அப்பட்டமாக கழட்டி எறிந்த மேலும் ஒருநாள் வல்வைப்படுகொலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 ம் ஆண்டு ஓகஸ்ட்் மாதம் 02 ம் நாள் வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் மோதலில், 09 இந்திய இராணுவம் பலியானதுக்காக 2 ம், 3 ம், 4 ம் நாள்களில் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் அப்பாவி மக்கள் மீது மிக மோசமான கோரத்தாண்டவத்தினை ஆடியது.
இதன்போது 63 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 100க்கு மேற்பட்ட மக்கள் பெரும் காயப் படுத்தப்பட்டும், 123 வீடுகளை முற்றாக எரித்து சாம்பலாக்கியும், 45 கடைகள் முற்றாக சூறையாடப்பட்டும், 175 மீன் பிடி வள்ளங்களை முற்றாக எரியூட்டியும் முழு வல்வெட்டித்துறையும் சுடுகாடாக்கியது இந்திய இராணுவம்.
இந்த கொடூரமான வல்வைப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
சனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், வல்வையில் வைத்து 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய அமைதிப்படை இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களும் இன்று நினைவு கூரப்பட்டிருந்தனர்.
படுகொலையான மக்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி சிறிலஙக்ா படைகளால் முற்றாக அழித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் இன்றைய நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.