முல்லைதீவில் நாயாற்றில் எட்டு தமிழர்களது வாடிகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடைபெறுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் தமிழர்களுடைய வாடிகள் நேற்று இரவு எரியூட்டப்பட்டுள்ள நிலையில், இதனால் தமிழ் மீனவர்கள் சுமார் 5 மில்லியனிற்கும் மேற்பட்ட பொருள் இழப்புக்களைச் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்றுறையினரால் தெரிவிக்கப்படும் அதேவேளை, அப்பகுதியிலுள்ள சிங்கள மீனவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் அவர்களிற்கு இரவு பகலாக பாதுகாப்பு வழங்கிவருகின்றனர்.
நேற்று மாலை ஆறு மணியளவில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்கென கடலுக்கு சென்ற தென்னிலங்கை மீனவர்களின் படகுகளை நாயாற்றின் தமிழ் மீனவர்கள் முன்னின்று தடுத்து திரும்பி அழைத்ததை தொடர்ந்து இரவு பதினொன்று மணியளவில் தமிழர்களில் எட்டு வாடிகள் எரித்து நாசம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், பெறுமதியான வலைகள் உள்ளடங்கலாக தமிழர்களின் எட்டு வாடிகள் இதன்போது முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.