நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறும் தற்போதய இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களின் கண்களை மூடி விட்டு வடக்கில் சிங்களவர்களை பலவந்தமாக குடியேற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட டிலான் பெரேரா, அரசாங்கம் நல்லிணக்கத்தை செயற்படுத்தி வருகின்றது என்றால், பலவந்தமாக வடக்கில் சிங்களவர்களை அழைத்துச் சென்று குடியேற்ற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படியானால் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை செயற்படுத்துவதில்லை எனவும், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மாத்திரமே அரசாங்கம் நல்லிணக்கத்தை செயற்படுத்தி வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
நல்லிணக்கத்தை செயற்படுத்துவதாக கூறும் அரசாங்கம், வடக்கில் சிங்களவர்களை அழைத்துச் சென்று குடியேற்றுமாயின் அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளில் தோல்வியடைந்துள்ளது என்றே அர்த்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில்லை எனவும், அபிவிருத்தி செய்வதில்லை என்றும், வீதிகளை அமைப்பதில்லை என்றும், நல்லாட்சியும் இல்லை எனவும், ஆனால் தமிழ் மக்களின் கண்களை மூடி விட்டு, சிங்கள மக்களை அழைத்துச் சென்று குடியேற்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தில் தோல்வியடைந்துள்ள இந்த அரசாங்கத்திற்கு, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல் போயுள்ளது எனவும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.