தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் யாப்பின் தங்களது கருத்துக்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதாலேயே தாங்கள் பிரிந்து செல்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது எனவும், எனினும் அரசியல் யாப்பின் ஊடாகவே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பை முன்வைப்பதன் மூலம் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும், எனினும் இது பிரச்சினையின் தீர்வுக்கான அத்திவாரமாக மாத்திரமே அமையும் என்றும் அவர் விபரித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கான இணக்கப்பாட்டை தமிழ் மக்கள் இன்னும் தெரிவிக்காதுள்ளனர் எனவும், சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டுமா என்று கேட்டால், அப்படி ஒரு தீர்வு அவசியம் இல்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு, ஒரே நாட்டுக்குள் வாழ தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.