தமிழ் மக்கள் பேரவையின் புதிய அலுவலகம் திறப்பும், 12 ஆவது கூட்டத் தொடரும், பெரும் பரபரப்புக்கள் மற்றும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இன்றையநாள் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.
யாழ் பலாலி வீதி கந்தர்மடச் சந்தியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து பேரவையின் கூட்டமும் இறைவணக்கத்துடன் மதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்றது.
பேரவையின் கடந்த கூட்டங்களுக்கு ஊடகங்களுக்கு அனுமதியளிக்காத நிலையில், இன்றைய கூட்ட ஆரம்பத்தில், முதலமைச்சரின் உரையினைப் பதிவு செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் ஊடகவியியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்த போதிலும், கூட்டம் முடிவைடைய ஊடக சந்திப்பொன்றை நடத்துவதாக ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்ததற்கமைய சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தருமான சிவநாதன், யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் முன்னாள் தலைவர் கேசவன் ஆகியோர் இணைந்து இந்த ஊடக சந்திப்பை நடாத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் சாரம்சங்களை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
இளைஞர் மாநாடொன்றை நடத்ததுவது தொடர்பிலும், ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த அமர்வில் தமிழ்த் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது தொடர்பிலுமே அதிகம் பேசப்பட்டதாக இதன் போது அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை கூட்ட ஆரம்பத்தின் போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்குவது, புதிய கட்சியை ஆரம்பிப்பது, வேறு கட்சியில் இணைவது, தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்களை இணைத்துக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை போன்று பொது அமைப்பாக இயங்குவது என்று தனக்கு தற்போதுள்ள நான்கு தெரிவுகள் தொடர்பில் பேசியிருந்தார்.
அந்த விடயம் குறித்தும் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில், அதில் முதலமைச்சர் அரசியலில் இருந்து ஒதுங்குவதனையோ, பேரவை போன்று பொது அமைப்பில் மாத்திரம் தொடர்வதனையொ பலரும் விரும்பவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை விடுத்து தனிக்கட்சியா, வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்தே விரிவாக ஆராயப்பட்டது எனவும், ஆனாலும் முதல்வரின் முடிவெ இறுதியானது என்று தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனிவாவில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும், அங்கு தமிழர் தரப்பாக புலத்திலும் தாயகத்திலும் இருக்கின்ற தரப்புக்களை இணைத்துக் கொண்டு செயற்படுவதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.





