மன்னார் ‘சதொச’ வளாகத்தில் பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.
மன்னார் நீதவான் சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அந்த மனித எலும்புக்கூடு காணப்பட்டது.
குறித்த மனித எலும்புக்கூடு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதைக்கப்பட்ட நிலை மூலமாக, குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என்று நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத விடயமாக காணப்படுகின்றன எனவும், இவைகுறித்த முடிவுகள் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் நிலையில், இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.