பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழக ஆளுனர் ஒப்புதல் வழங்கியே தீரவேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளர் உள்பட 7 பேர் விடுதலை தற்போது தமிழக ஆளுனர் கையில் உள்ளது.
எனினும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையின்படி முடிவெடுக்காமல் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ஜெயகுமார் கூறியபடி தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுனர் ஒப்புதல் வழங்கித்தான் தீரவேண்டும் எனவும், அதிகபட்சமாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று மட்டுமே ஆளுனர் தெரிவிக்க முடியும் என்றும், மறுபரிசீலனையில் தமிழக அமைச்சரவை இதே முடிவை எடுத்தால் ஆளுனர் ஒப்புதல் வழங்கியே தீரவேண்டும் என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.