வடகொரியாவில் உள்ள அணு ஆயுத ஏவுகணை சோதனைக் கூடங்களை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிப்பதற்கு அந்த நாடு இணக்கம் தெரிவித்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜே உன்னும் வடகொரியா தலைநகர் பியாங்கியாங்கில் இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சு நடாத்தியதன் பின்னர் இரண்டுவரும் கூட்டாக ஊடகவியலாளரைச் சந்தித்தனர்.
இதன்போது தென்கொரிய அதிபர் மூன் ஜே உன் வடகொரியா அதன் முக்கிய அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நிரந்தரமாக அழிப்பதற்கு ஓப்புக் கொண்டுள்ளதாகவும், அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்திகள் இல்லாத அமைதியான நிலமாக கொரிய தீபகற்பம் மாற வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
வடகொரியா அதன் முக்கிய அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிப்பதற்கும் அந்த நாடு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அத்துடன் அமெரிக்காவின் பரஸ்பர நடவடிக்கையைப் பொறுத்து மீதமுள்ள அணு ஆயுத சோதனைகளையும் அழிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வடகொரிய அதிபர் கிம் யொங் உன், தான் எதிர்காலத்தில் மூன் ஜே இன்னை தென்கொரியாவில் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வடகொரியா தலைநகர் பியாங்கியாங்கில் நடைபெற்று வரும் உச்சநிலைச் சந்திப்பின்போது இரண்டு கொரிய நாடுகளிடையிலும் நல்லுறவை மேம்படுத்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் கூட்டு அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
அத்துடன் இரண்டு கொரியாக்களின் தற்காப்புப் படைத் தலைவர்கள், பதற்றநிலையைக் குறைப்பதற்கான விரிவான இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவ்வாறே 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளைக் கூட்டாக ஏற்று நடத்த முயற்சி மேற்கொள்வதற்கும், யப்பானியத் தலைநகர் தோக்கியோவில் நடைபெறும் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் இணைந்து பங்கேற்கவும் இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.