அரசியல் கைதிகளை, அவர்களுக்கான விசாரணைகளை நடத்தி அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, இன்று முல்லைத்தீவு, காணமல்போனோர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில், குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்,
ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில் கூட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் அவர்கள் குடும்பங்களை எண்ணியும், தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணியும் அங்கு தவித்துக்கொண்டு உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுப் புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்ட காலங்களில், அதற்கு ஏற்கனவே இருந்த மதிப்பு, மரியாதைகள் எல்லாம் பொய்க்கப்பட்டு, இன்று இந்த போராட்டங்களுக்கு மரியாதை இல்லாத நிலையைத்தான் நல்லாட்சி அரசு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு விடயத்திற்கும் வீதிகளில் நின்று போராடுகின்ற போதிலும், தனது இனத்திற்கும் ஒரு முகத்தையும், எங்களுடைய தமிழினத்திற்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு இந்த நல்லாட்சி அரசானது வேடிக்கையான விளையாட்டுக்களை செய்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான ஒரு நல்லாட்சியாக இருந்தால், அந்த அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளித்தாவது விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையில், மாற்றான் தாய் மனப்பான்மையோடு இந்த அரசானது, மிக மோசமான குற்றங்களைச் செய்தவர்களை நடமாட விட்டுக்கொண்டு, எங்களுடைய இனத்துக்காக போராடியவர்களை, அங்கே பல ஆண்டு காலமாக சிறைவைத்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவராலும் மன்னிக்க முடியாத, உங்களால் நியாயப்படுத்த முடியாத செயலாக நாங்கள் இதனைக் கருதுகின்றோம் எனவும், தயவுசெய்து ஒரு நல்லாட்சி அரசு என்ற பெயரோடு இருக்கவேண்டுமாக இருந்தால் நல்லாட்சி அரசுக்குரிய அந்தக் கோட்பாடுகளை மதித்துச் செயற்படுமாறும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.