சீனாவிடம் இருந்து நேற்று இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை நாணயத்தை வலுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நிதியுதவி பயன்படும் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டு நாணய தவணை நிதியளிப்பு வசதியின் கீழ், கடந்த மார்ச் மாதம் 1000 மில்லியன் டொலருக்கான முன்மொழிவுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து கோரப்பட்ட நிலையில், இதற்கு நான்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அந்த முன்மொழிவுகள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் கடுமையான மதிப்பீடுகள் மற்றும் பேச்சுக்களை அடுத்து, சீன அபிவிருத்தி வங்கி தெரிவு செய்யப்பட்டது.
இதன் மூலம், இலங்கை அரசாங்கம் 1000 மில்லியன் டொலரை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து நேற்று பெற்றுள்ளதுடன், இந்தக் கடன் 8 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.