மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான விபரங்களை அறியும் பொருட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக வாதிடும் சட்டத்தரணிகள் அடங்கிய குழு அங்கு பயணம் செய்துள்ளது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று 100ஆவது நாளாக தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த குழு இன்று காலை 10.30 மணியளவில் அங்கு பயணம் செய்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கின்ற போதிலும், அங்கு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும், அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றன.
மன்னார் நீதவான் சரவணராஜாவின் மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இது வரையான அகழ்வு பணிகளின் முடிவின் படி 216 இற்கு அதிகமான மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதில் 209 க்கும் அதிகமான மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றன.