நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மகிந்த ராஜபக்ஸவின் சனநாயகக் கடமை எனவும், இருப்பினும் பெரும்பான்மையை அவர் நாடாளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
பணம் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும் எனவும், இருந்தும் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்று இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
கடந்த 14 ஆம் நாள் மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதுடன், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்து கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர்.
இலத்திரனியல் சாதனம் மூலம் வாக்கெடுப்பு நடத்த மீண்டும் நாடாளுமன்றம் கூடிய போதிலும், மகிந்த ராஜபக்ஸ தரப்பினர் நாடாளுமன்றத்தில் குழப்பமேற்படுத்தி, சபாநாயகர் வருகையைக் குழப்பினார்கள்.
இதன்போது மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பிரதமராகப் பதவி வகிக்க மகிந்த ராஜபக்ஸவிற்கு உரிமை இல்லை என்றும், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் சனநாயக விரோதியாவார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.