இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார் என்று அரச தலைவர்க்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலிற்கு அழைப்பு விடுக்கும் உத்தரவை சிறிசேன கடந்த மாதம் விடுத்திருந்த போதிலும், தற்போது சிறிசேன அந்த உத்தரவை கைவிடுவது குறித்து சிந்தித்து வருகின்றார் என்று அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரச தலைவர் அந்த உத்தரவை மீளப் பெறுவார் எனவும், இதன் மூலம் தனது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதை தவிர்த்துக்கொள்வார் என்றும் அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள தெரிவித்துள்ளன.
அரச தலைவர் குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சிறிசேனவுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டுள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தை கலைத்தது அரசமைப்பிற்கு முரணான செயல் என்று நீதிமன்றம் தெரிவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை நீதிமன்றம் தனது நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளிக்கும் என்பது தெரிந்துள்ளதால் அரச தலைவர் இந்த பிரச்சினையிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றார் என்றும் அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.