அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ஸ என்று அனைவரும் இனவாதிகளே என்றும், இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு நலன் கிட்டாது எனவும் சனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
சனநாயக மக்கள் காங்கிரசின் மன்னார் மாவட்டக் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு எதனை செய்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், சமஷ்டியை தருகின்றோம், வடக்கு கிழக்கை இணைக்கின்றோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றோம், காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தருகின்றோம் என்றெல்லாம் கூறிய போதிலும், ஒன்றுமே நிறைவேறியதாக இல்லை என்றும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அனைத்தும் ஊழல்களிலேயே நிறைவடைந்துள்ளதாகவும், இந்த நல்லாட்சி வந்து மூன்று ஆண்டுகளில் மத்திய வங்கியில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் பிரபா கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.