2015ல் ஜி -யின் அழுத்தமான வலியுறுத்தலைத் தொடர்ந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், புத்த மதம் போன்ற வெளிநாட்டு மதங்களை சீனயமாக்கும் முயற்சிகளில் கட்சியின் ஒரு பிரிவான – ஐக்கிய முன்னணி பணி துறை – கவனம் செலுத்தியது. ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் வாய்ப்புள்ள விஷயங்களை அமைதிப்படுத்துதல் அல்லது தன்யமாக்கல் பணியை அந்தப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
ஐந்தாண்டு திட்டம் என்ன?
இதற்கான வரைவுத் திட்டம் இஸ்லாத்தை அதிகளவில் “சீனமயமாக்குவதை” நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் வழக்கங்கள் கலந்ததாக மதத்தை ஆக்கும் முயற்சியும் இதில் அடங்கியிருப்பதாக – இஸ்லாமியர்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும், பிரதிநிதித்துவ அமைப்பாக உள்ள சீன இஸ்லாமிய சங்கம் தெரிவித்துள்ளது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இஸ்லாத்தை சீனமயமாக்குவது என்பது “நம்பிக்கைகள், வழக்கங்கள் அல்லது இஸ்லாத்தின் சித்தாத்தங்களை மாற்றுவது கிடையாது. ஆனால் சோஷலிச சமூகத்துடன் ஒத்திசைவு கொண்டதாக அதை மாற்றுவது” என்று பெய்ஜிங்கை சேர்ந்த சீன இஸ்லாமிய கல்வி நிலையத்தின் துணை டீன் காவோ ஜான்பு கூறியதாக, சீனாவின் தேசிய பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஜனவரி 6 ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
சீனவில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் “தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை மேம்படுத்திக் கொள்வது மற்றும் கட்சியின் தலைமையைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் மதத்தை சீனமயமாக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்று பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஐந்தாண்டுத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பது பற்றி சில தகவல்களையும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
“சோஷலிசத்தின் அடிப்படை விஷயங்கள்,” சட்டங்கள், பாரம்பரிய கலாச்சாரம் குறித்து சொற்பொழிவுகளும், பயிற்சிகளும் இருக்கும் என்று சீன இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் யாங் பேமிங் தெரிவித்துள்ளார்.
“நேர்மறை உத்வேகம்” உள்ள பிரகாசமான அம்சங்களைக் குறிப்பிடும் விஷயங்களில் இஸ்லாமியர்கள் “வழிநடத்திச் செல்லப்படுவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை சீனமயமாக்கும் அம்சங்கள் பற்றி “நம்பிக்கையாளர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்குவதற்கு” மசூதிகளில் புத்தகங்கள் அளிக்கப்படும் என்று காவோ தெரிவித்தார்.
ஐந்தாண்டுத் திட்டத்தின் கூடுதல் விவரங்கள் ரகசியமாக உள்ள நிலையில், காலப் போக்கில் அவை வெளியிடப்படும் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ மதத்தின் மீது கடந்த ஆண்டு அமல் செய்யப்பட்ட இதேபோன்ற ஐந்தாண்டுத் திட்டத்தை நினைவுபடுத்துவதைப் போல இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய மதம் மற்றும் சோஷலிச மாண்புகளுக்கு இடையே உறவை ஏற்படுத்துவது, இறையியல் அடித்தளத்தை இன்னும் ஆழப்படுத்துவது, இறையியல் கல்வியை ஒழுங்குபடுத்துவது, “சீனவின் தன்மைகளுடன்” நம்பிக்கையை வளர்ப்பது மற்றும், இரக்க குணத்தில் கவனம் செலுத்துவது என்ற ஐந்து அம்சங்களைக் கொண்டதாக இந்தத் திட்டம் இருக்கிறது.
உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து போதனை செய்வதை சட்டமாக்கிய சீனா
சீனாவில் முஸ்லிம்கள் நீளமாக தாடி வளர்க்க தடை
ஊடகங்கள் இதை எப்படி செய்தியாக வெளியிட்டுள்ளன?
சீன மொழி ஊடகங்களில் இந்த ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய கூட்டம் வெளியானதாக கவனத்திற்கு வரவில்லை. இஸ்லாத்தை சீனமயமாக்குவது பற்றி 2018 முழுக்க சீன ஊடகங்கள் செய்தியாக்கி வந்த நிலையில், குறிப்பாக இன-மத தீவிரவாதத்தால் உந்தப்பட்ட பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இது முக்கியமான அம்சம் என்று சீன அதிகாரிகள் கூறி வந்த நிலையில், இதுபற்றி செய்தி வெளியாகாமல் இருப்பது அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஆங்கில இதலில் இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதன் சீன மொழி பதிப்பில் வெளியாகவில்லை. இதுகுறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு அரசு முயற்சிக்கிறது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.
குளோபல் டைம்ஸ் – மற்றும் வெளிப்படையாகப் பேசும் அதன் முதன்மை ஆசிரியர் ஹூ ஜிஜின் – ஜின்ஜியாங் முகாம்கள் பற்றி சீனாவின் கருத்துகளை கடந்த அரையாண்டு காலமாக முதன்மைத்துவத்துடன் வெளியிட்டனர். அந்தப் பகுதியில் உய்குர் இஸ்லாமியர்களுக்கு பெரிய அளவிலான பாதுகாப்பு முகாம்கள் இருப்பது பற்றி பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடத் தொடங்கியதில் இருந்து இந்தச் செய்திகள் வெளியாகி வந்தன.
ஜின்ஜியாங் முகாம்களுக்குச் செல்ல அந்தப் பத்திரிகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அங்குள்ள முகாம்கள் “அடிப்படைவாத மனப்போக்கை மாற்றும்” தேவைக்காக நடத்தப்படும் தொழிற்பயிற்சி மையங்கள் தானே தவிர, வேறெதுவும் கிடையாது என்று ஹூ கூறியுள்ளார்.
வருடாந்திர இஸ்லாமிய கூட்டத்தில் யார் பங்கேற்றது?
பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் உள்புற மங்கோலியா, ஜியாங்சு, ஹுனான், குவாங்டாங், யுன்னன், குயிங்ஹாய் மாகாங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தன்னாட்சி பெற்ற ஜின்ஜியாங் பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக உள்ளபோதிலும் அங்கிருந்து யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.