பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிளவுபடாததும், பிரிக்க முடியாததுமான நாட்டில் அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு தமிழர்கள் வரவேண்டும்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுடன், இது தொடர்பான கோரிக்கைகளை நாம் உரிய தரப்பினரிடம் முன்வைத்திருக்கின்றோம்.
யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் நாம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில்சேவையினை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாகவே நாம் பார்க்கின்றோம்.
இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் எமது வேற்றுமைகளைக் களைந்து செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும். எனவே ஆளுநர் என்ன ரீதியில் நான் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்தியத் துணைத் தூதுவர் ஆகியோருக்கும் நன்றி செலுத்துகின்றேன்.
எதிர்காலத்தில் இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நானும் எமது மக்களும் தயாராகவே இருக்கின்றோம்” என ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.