தனது பதவியை விட்டு விலகப் போவதாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணசபை தேர்தல் நடத்தப்படாவிட்டால் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசுத் தலைவருக்கான தேர்தல் எந்தவேளையும் நடத்தப்படலாமென்றாலும், அதற்கு முன்பாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமென அவர் ஆதங்கம் வெளியிட்டார்.
மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், ஆனால் அரசியல்வாதிகள் அவர்களது நலன்களை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாகவும் அவர் குறை கூறினார்.
இந்நிலையில் நொவம்பர்; 10ஆம் நாளுக்கு முன்னர் இந்த தேர்தல் நடைபெறாவிடின், தேர்தல்கள் ஆணையாளர் பதவியை விட்டு விலகத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் காணப்படுகின்ற 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகளின் கால எல்லை ஏற்கனவே முடிவடைந்துள்ளதுடன், ஏனைய 3 மாகாண சபைகளின் காலங்களும் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.