இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த விமர்சனங்களால், ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிக உடகம கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அநீதியான விமர்சனங்கள் காரணமாக நாங்கள் மனமுடைந்து போயுள்ளதுடன் உற்சாகமிழந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்ட விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு குறித்து கருத்து தெரிவித்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தீபிக உடகம சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை கண்காணிப்பதும் உரிமைகளை உறுதி செய்வதும் மனித உரிமை ஆணையகத்தின் பணிகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.
கைதிகள் உரிமைகள் மற்றும் அவர்களிற்கான தண்டனைகள் குறித்து மனித உரிமை ஆணையம் தகவல்களை முன்வைப்பதை குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வதாக அர்த்தப்படுத்துவது தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்,இதன் காரணமாக ஆணைக்குழு விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியது. அவர் அதற்கு பதில் அளித்துள்ளார் என தீபிக உடகம குறிப்பிட்டுள்ளதுடன், கைதிகளும் மனிதர்களே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மாலியில் உள்ள இலங்கையின் அமைதிகாக்கும் படையினரை மீள அழைப்பது மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கைகளால் தாமதமானது என ஜனாதிபதி தெரிவித்திருப்பது தவறானது எனவும் தீபிக உடகம தெரிவித்துள்ளார்.
மாலியில் இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீது பழியை போடுவது கடும் கரிசனத்தையும் வேதனையும் அளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களது சுதந்திர தன்மை காரணமாகவும் எங்கள் மீதான நம்பிக்கை காரணமாகவும் ஐநா அமைதிப்படையில் இடம்பெறும் படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஐநா எங்களிடம் வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.