நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான கால அட்டவணையையும், மூலோபாயத்தையும் வெளியிடவேண்டுமென கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளதை முன்னிட்டு அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நீதி வழங்கப்படுவதற்கு – ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் இலங்கை குறித்த தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக் கூறல் நடவடிக்கைகள், போரில் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டுமெனக் கனடா நம்புவதாகவும், இந்த நோக்கத்துக்காகவே, இலங்கை குறித்த மையக் குழுவில் கனடா இணைந்து கொண்டுள்ளதாகவும் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் மேலும் கூறியுள்ளார்.





