குற்றச் செயல்களுக்கு பொறுப்புக்கூறுதல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட(Alaina B. Teplitz) குற்றம் சுமத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வு நடவடிக்கைகள் மிகுந்த மந்த கதியில் முன்னெடுக்கப்படுகின்றது என்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலும், கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதன் அடிப்படையில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வின் பிரேரணையில் உள்ள காரணிகள், இலக்குகளை பொறுப்புடன் அடைதல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், உண்மைகளைக் கண்டறிதல் பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை கையாள வேண்டியது இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.