- இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலான நிகழ்வுகள், தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகசந்தேகத்தின்பேரில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- “இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன.” என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

- கொழும்பில் 6 இடங்களிலும், நீர்க் கொழும்பு மற்றும் மட்டக்களப்பிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டு வெடிப்புகளில் இதுவரை 207 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
- கொழும்பில் உயிரிழந்தவர்களில் 27 பேர் வெளிநாட்டவர்கள். ஆனால், எந்தெந்த நாட்டினர் என்ற விவரங்களை அரசு வெளியிடவில்லை. ஊடகங்களையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
- இன்று காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெஹிவலாவிலும், கொழும்புவின் தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
- இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

- இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
- இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது.
- இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.