இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமல் இருப்பது, இதுவே முதல்முறை.
இந்த நிலையில், இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது குறித்து முஸ்லிம் சமூகத்துக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அந்த கருத்துகள் சிலவற்றை பிபிசி தமிழ் இங்கு பதிவு செய்கிறது.
“முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு கூட்டாக பதவி விலகியது வரவேற்கத்தக்க விடயம் என்றாலும், அவர்கள் இந்த பதவி விலகலின்போது முன்வைத்த நிபந்தனைகளை இன்னும் விசாலப்படுத்தியிருக்கலாம்,” என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில்.
“முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையினை ஒரு மாத காலத்தினுள் வெளிப்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையினை முன்வைத்தே, முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.”