நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போது உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது நோய் பரவுவதற்குக் காரணமாகும் என சுகாதார அமைப்பினால் அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் உள்நாட்டுப் பிரஜைகளும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படவேண்டியுள்ளதாகவும் மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியைப் பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பேருந்து மற்றும் ரயில் சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக இடைவெளியைப் பேணுவதற்காக பேருந்துகளிலும் ரயிலிலும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே பயணிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்குப் போதுமானளவு அரசாங்கம் விநியோகித்துள்ளதாகவும் அவற்றை மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் விநியோகிக்குமாறு அந்த விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது குறித்து வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.