இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக சிறிலங்கா, இந்திய இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 22 மற்றும் 30ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் குறித்த திட்ட வரைபினை இந்தியப் பிரதமரிடம் கையளித்திருந்தார்.
இந்த திட்டம் தொடர்பாக இந்தியத் தரப்பினரால் திருப்தி தெரிவிக்கப்பட்டதுடன், கடந்த 2016 மற்றும் 2018 ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து நிரந்தர தீர்வினை காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏற்பட்ட கொரோனா காரணமாக உலகளாவிய ரீதியில் தோன்றிய அசாதாரண சூழல் காரணாமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சாவார்த்தைகள் இழுபட்டு வந்ததையடுத்து காணொளி ஊடாக பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இந்திய, சிறிலங்கா அதிகாரிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.