மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சிங்கள குடியேற்றவாசிகளால் கால்நடை மேய்ச்சல் காணிகள் அபகரிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரன் ஆகியோரின் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மூன்று தலைமுறைகளாக தாங்கள் குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், தற்போது அங்கு வரும் சிங்களக் குடியேற்றவாசிகள் அங்கிருந்து செல்லுமாறு தங்களை அச்சுறுத்துவதாகவும், மாடு வளர்க்கும் மேய்ச்சல் தரையை உழுது பயிர்செய்வதற்கு முயற்சிப்பதாகவும் பண்ணையாளர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த விடயத்தில் தங்களுக்கு நீதியைப் பெற்றுதர வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.