மினுவாங்கொடை, பேலியகொடவைப் போலவோ, அக்கரைப்பற்று போலவோ கொத்தணி கள் யாழ்ப்பாண குடாநாட்டிலும் உருவாக இடமளிக்க வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
மருதனார்மடத்தில் திடீரென கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள்.
இந்தநிலையில், பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடும் பகுதியிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் வெளியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். தொற்றாளர்கள் தாம் சென்று வந்த இடங்கள் தொடர்பில் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும்.
வர்த்தகர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். அவர்கள் வெளியிடங்களில் வர்த்தக ரீதியில் தொடர்புகளை வைத்திருப்பவர்கள்.
யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும். சுகாதாரப் பிரிவினர் மற்றும் படையினரின் கடமைகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.