வவுனியா- வெண்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
செட்டிகுளம் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோல்வியை தழுவியிருந்தது.
இதையடுத்து, புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறெஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெகதீஸ்வரன் மற்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஏற்கனவே தவிசாளராக பதவி வகித்த அந்தோணி ஆகியோரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டன.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 01 உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் 01 உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரான அந்தோணி 6 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார்.