தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மேலும் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஷ்வான் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை அவர் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாளபிள்ளை பிரசாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்று இணையவழியாக மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ. பிரசாந்தன், கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் கடந்த மாதம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
ஆரையம்பதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கைது செய்யப்பட்டார்.