ஜனாஸா விவகாரத்தில் முஸ் லிம் மக்களுடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பக்கபலமாக நிற்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, முஸ்லிம் மக்களின் ஜனாஸா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
இது நியாயமான கோரிக்கையே. உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கை வைப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எனவே முஸ்லிம்களின் உடல்கள் சமய ரீதியாக புதைக்கப்படவேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது என்றார்.