ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா, ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும். பழைய விடயங்களை மறந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று திருத்தச் சட்டமூலங்களை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதையே அரசியலமைப்பும் நமது தேசிய கீதமும் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறந்தகாலத்தை திரும்பிப்பார்த்தால் அனைவரும் தவறு செய்த இடங்கள் பல இருக்கவே செய்கின்றன.
1958,1978 கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு, 1983 கலவரம், கபதிகொள்ளவா தாக்குதல், காத்தான்குடி தாக்குதல். அண்மையில் இடம்பெற்ற சஹ்ரானின் தாக்குதல் எல்லாம் கரும் புள்ளியாக அமைந்தன.
சமூகத்தை ஓரம்கட்டி இதற்கு தீர்வு காண்பது என்பது தவறான வழியைத் தான்காட்டும். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான தலமாக இந்த மன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் இடமாக இந்தப் நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டால் எதிர்காலம் சுமுகமாக அமையாது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.