யாழ். பல்கலைக்கழகத்தில் “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்து அகற்றப்பட்டமை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள, பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இதற்கு எதிராக நாளை நடத்தப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.
“சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை, வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்க வேண்டும்.
இந்தப் பணிப்புரை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்கள், நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தினால், சமூகத்தில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம்.
அன்றைய இரவில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக, எமது அங்கத்தவர்கள் எவராவது மனித நேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால், நாம் மக்களிடம் மன்னிப்பு கோர கடமைப்பட்டுள்ளோம்.
பல்கலைக்கழகம் சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டியது அவசியமாகும். நாம் சமூகத்தை புறந்தள்ளி மமதையுடன் செயற்பட முடியாது.
இது தொடர்பில் நாளை வடக்கு கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது முழு ஆதரவையும் வழங்குகிறோம்.” என்றும், ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.