சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிடின், நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர்,
‘புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும்.
புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது.
ஆகையால் ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.
எமது மக்களைப் பொறுத்தவரை – எம்மைப் பொறுத்தவரை ஒரு நியாயமான- சமத்துவமான – அனைவரதும் உரிமைகளையும் மதிக்கின்ற – நாட்டுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத – சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய – நீடித்து நிலைத்திருக்கக் கூடிய – நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரக் கூடிய – புதிய அரசமைப்பு உருவாவதற்கு நாம் பரிபூரண உதவி வழங்குவோம்.
நிரந்தர அரசியல் தீர்வின் ஊடாகவே நாட்டு மக்களின் எதிர்காலம் வளமடையும் என்பதை ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அந்தத் தீர்வானது சிறிலங்கா வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் எம் மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்வெய்துகின்றேன். .“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.