ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 46ஆவது அமர்வில் கொண்டுவரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகளது குழுவினர் இணை அனுசரணை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் விடுத்திருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
சிறிலங்கா தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகள் குழுவில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி ,வடக்கு மஸிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகியன இடம்பெற்றுள்ளன.
சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைவுகள் சமரசமுடையதாக காணப்படுவதாக சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடும் அதேவேளை சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தீர்மானத்தைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுகின்றார்.
புதிய தீர்மானத்திற்கு உடன்படுவது சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக சவால் மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா வின் அரசியல் யாப்பிற்கும் இறையாண்மைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதால் ஜெனிவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை ஒரு அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் நிலைமைக்கு வழிகோலியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.