ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மூன்று முக்கிய தலைவர்கள், விலகிக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோரே கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு தொடக்கத்தில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்திருந்த போதும், அவர் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் கட்சியின் தலைவராக, ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கட்சியில் புதிய பதவிகள் வழங்கும் விடயத்தில் தான்தோன்றித்தனமாக முடிவு எடுக்கப்பட்டதாக,வும் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொள்வர் என்றும் கூறப்படுகிறது.