மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில், கால்நடைகளின் மேய்ச்சல் தரையை சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவிலுள்ள வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல் ஏற்றம், காத்தாடியார்சேனை, பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடி, வெட்டவிச்சுகுளம் ஆகியன பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சில வருடங்களாக சிங்களவர்கள் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதுடன், 1500 ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு, முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பட்டிப்பளை பிரதேச சபைக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடி, பேரணியாக சென்று, பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பிரதேச செயலாளரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.