சிறிலங்கா கடற்படைப் படகு மோதியதில் உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்களை, வீட்டிற்கு கொண்டு செல்லாமல் அடக்கம் செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் வீதி மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைப் படகு மோதி உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்களும் இன்று கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மீனவர்கள் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மண்டபம், தங்கச்சிமடம், உச்சிப்புளி, திருப்புல்லாணி ஆகிய இடங்களுக்கு அமரர் ஊர்திகளில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர் மெசியாவின் உடலை காவல்துறையினர் தங்கச்சிமடத்தில் உறவினர்கள் காத்து கொண்டிருந்த இடத்தில் நிறுத்தாமல், நேரடியாக கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து தடுப்புகளை வைத்து மறித்து இராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.