டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதிக்கு வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளானர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் உழவு இயந்திரப் பேரணியை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள், உழவு இயந்திர, இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர். அத்தோடு, ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
தஞ்சாவூரில் நடக்கவிருந்த உழவு இயந்திரப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
அதேபோல திருச்சியிலும் விவசாயிகள் உழவு இயந்திரப் பேரணி நடத்தினர். திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.