ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் தொடர்பாக தாம், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நேற்று இரண்டாவது நாளாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு மற்றும் வனாத்தவில்லு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவங்களுடன் ஒரே தீவிரவாதக் குழு தொடர்புபட்டிருப்பது குறித்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூறியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதக் குழுவினர் பாரிய அழிவுகளை ஏற்படுத்த திட்டமிடுள்ளனர் என்பது இந்த சம்பவங்கள் மூலம் தெரியவந்திருந்தது என்றும், ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைத்ரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்று அவருடன் பேசியதாகவும், பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அதுபற்றி பேச நேரம் ஒதுக்கித் தருவதாக கூறிய போதும், பின்னர் அதற்கா நேரம் தரவில்லை” என்றும் ஷானி அபேசேகர வாக்குமூலம் அளித்துள்ளார்.