அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்னும் தீவிரமாக செயற்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அவர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘தற்போதைய தடுப்பூசி வழங்கல் மற்றும் உற்பத்தி திட்டங்களை மறு ஆய்வு செய்த பின்னர் அனைத்து மாகாணங்களுக்கும் வாராந்திர தடுப்பூசி வினியோகத்தை 86 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஃபைஸர் மற்றும் மொடர்னா நிறுவனங்களிடம் இருந்து தலா 100 மில்லியன் வீதம் கூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவது விரைவில் உறுதிப்படுத்தப்படும். இந்த ஆண்டு கோடை கால இறுதிக்குள் 300 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும்’ என கூறினார்.