ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் (michelle bachelet) புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மனித உரிமைகள் ஆணையாளரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் (michelle bachelet) சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஐ.நாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகப்பூர்வ கீச்சகப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் சிறிலங்கா தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.