யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 373 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வட மாகாணத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
யாழ். மாவட்டத்தில் 6 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டவர்களில், 5 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்கள், காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்தவர்கள் என்றும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த இவர்கள், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்றும், அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் பெறப்பட்ட மாதிரியில், அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.